அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

III. ஏலேலோ ஐலசா.

கடல்மீன் பிடித்தலைப்போல் ஒரு கடினமானத் தொழில் இருப்பதாகத் தெரியவில்லை. வெறும் உடல் உழைப்பை வைத்து மட்டுமல்ல, பலன் இருக்கும் என்ற உறுதியற்றபோதும் அலை கடந்து தொழில் செய்யும் நிலை.

பருவங்களின் தாக்கமிருக்கும் தொழிலானபோதும், ஸ்த்திரத்தன்மை ஒருபோதும் இருந்ததில்லை.

விவசாயத்திலும் ஸ்த்திரநிலை இல்லைதான் ஆனால், அதிகாலையில் வயலுக்குச் சென்றுவிட்டு செருப்பில் சகதியோடு பாடமெடுக்கும் ஆசிரியர்களிடம் நான் பயின்றிருக்கின்றேன். ஒவ்வொரு நாளும் முழு நாள் வேலை என்பது அதில் இல்லை.

மீனவனின் உறக்கம்கூட ஒரு வேலைதான், அந்த ஓய்வு இல்லாமல் அடுத்த நாள் கடலுகுப் போக முடிவதில்லை அவர்களால்.

உயிரை முதலீட்டும் மீனவர் தொழில் ஒப்பிடக் கடினமானது.

அதிகாலை இரண்டு மூன்று மணிக்கெல்லாம் கடற்கரை சுறுசுறுப்பாகிவிடும். கட்டுமரங்களை அலைகள் நிலம் வந்து கடல் செல்லும்போது கடலுக்குள் தள்ளிச் செல்வார்கள். அது அறிவியலா கலையியலா என விவாதிக்கலாம். அத்தனை நேர்த்தி. கட்டுமரங்கள் வெறும் 'மரங்கள்' என்றே அழைக்கப்படன, இனி இங்கும் 'மரங்கள்'தான்.

ஒரு மரத்திற்கு இரண்டு முதல் ஐந்துபேர் வரை. மரத்தில் மீன் பிடிக்க தேவையான வலைகள், தண்ணீர் மற்றும் முந்தைய நாள் சமைக்கப்பட்ட கஞ்சி. பழைய கஞ்சி போல ஒரு சுவையான, சத்தான உணவு கிடைப்பது அரிது. விவசாய கிராமங்களில் மீன் போட்டு தயார் செய்த கூழ் மட்டும் இதற்கு விதி விலக்கு. வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதை வாங்கி என் நினைவாகப் பருகுங்கள்.

கட்டுமரங்கள் இலவம்பஞ்சு மரங்களால் செய்வார்கள். மற்ற சில ஒத்த குணமுடைய மரங்களையும் உபயோகிப்பதுண்டு. எல்லோராலும் கட்டுமரங்களை செய்ய முடிவதில்லை. இதற்கென ஊரில் சில நிபுணர்கள் உண்டு. மரத்தை காயவைத்து, கடலில் கல்லை கட்டி மிதக்கவிட்டு ஊரப்போடுவார்கள். பின்பு செதுக்கி, ஒன்றாகக் கட்டி கட்டுமரத்தை உருவாக்குகிறார்கள்.

அடிப்பகுதியில் மூன்று பெரிய மரங்கள், பக்கவாட்டில் தடுப்பாக இருமரங்கள்.இரு முனைகளிலும் பெருவாரியான நீரைத்தடுக்க கொம்பு போன்ற வடிவுடைய தடுப்புகள். நீர உயர நியதிகள் அதிகம் இல்லதது மரம் கட்டும் முறை. கண்ணளந்ததே அளவு.

மரங்களை கயிற்றால் கட்டியே ஒன்று சேர்க்கிறார்கள். இதனால்தான் 'கட்டு' மரம்.

மரங்களை தொடுப்பதற்கு மூங்கில் மரத்தின் தடித்த அடிப்பாகத்தை பிளந்து தொடுப்பு. இதை தூக்கி தொடுப்பது பெரும் சாகசம். 'தொளவை' என இவை அழைக்கப்பட்டன.

வலைகள் பலவிதம். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப. பொதுவாக நைலான் நூலிழைகளை கோர்த்து கட்டப் பட்டிருக்கும் இந்த வலைகள். கயிற்றில் கட்டப்பட்டவலைகளும், நூல் வலை களும் உண்டு. வலைத்தொகுப்பை 'மடி' என்று சொல்வது வழக்கம். கடலுக்கு வலைகொண்டு மீன் பிடிக்கச் செல்வதை "மடிக்குப் போகிறது" என்று சொல்வதும் உண்டு.

வலைகோர்ப்பது மீனவப்பெண்களின் பொழுதுபோக்காக இருந்தது. கோர்த்த வலைகளை இவர்களே பயன்படுத்துவதில்லை. அது பீடி சுற்றுவதைப் போலான ஒரு அமைப்பு. வலை பின்னத் தேவையான நூல் மற்றும் உபகரணங்களை கொண்டு வந்து கொடுப்பார்கள், பின்பு பின்னிய வலைகளை வாங்கி செல்வார்கள். வலையின் நீளத்திற்கு ஏற்ப்ப கூலி. இப்போது பெண்கள் வலை பின்னுவதில்லை, ஏதாவது யந்திரங்கள் பின்னும்.

ஒருமுறை 'டிஸ்க்கோ' வலை என்று ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டது. 80களில் வந்த பொதுஜன உபயோகப் பொருட்கள் பல 'டிஸ்க்கோ' அடைமொழி கொண்டிருந்தன. அது ஒரு பல் பயன் (multi-purpose) வலையாக இருக்கலாம். இன்றும் அது பயன்படுத்தப்படுகிறது.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்ல மரங்களில் பாய் ஏற்றி செல்வார்கள். இதற்கென ஒருவகை துணி இருந்தது. நேர்த்தியாக தைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாய்கள். பாய்களை மரங்களில் ஏற்றுவதற்கு ஒரு நீள மூங்கில் கம்பு.

முக்கோணப் பாயின் ஒரு பக்கம் மூங்கிலோடு கட்டப்பட்டிருக்கும். பாயை ஏற்றுவது நேர்த்தியாகவும் கவனமாகவும் செய்யப்பட வேண்டிய வேலை. நேர்த்தி பிறழ்ந்தால் மரம் கவிழும். இந்தப் பாய்த்துணி வாங்கி வரும் போது வெள்ளையாகத்தான் இருக்கும். புளிவிதையை இட்டு இந்தப்பாயை அவித்தபின் அந்தக் கரும் பழுப்பு நிறத்தை அடைகிறது.

தூண்டிலில் மீன்பிடிப்பதும் உண்டு. ஆழ்கடலில் கிடைக்கும் சில பெரிய மீன்களை தூண்டிலிட்டே பிடிக்கின்றனர். கரையிலிருந்து கண்ணெட்டும் தூரத்தில் சென்று தூண்டில் மீன் பிடிப்பதை "ஒத்னா மரம்" (ஒத்தை மரம் என்று வாசிக்கலாம்) என்று அழைக்கிறார்கள். இந்த மரங்களில் தனியாகவே செல்வார்கள்.கரையிலிருந்து இந்த மரங்களில் இருக்கும் தங்கள் கணவர்களை பெண்களால் அடையாளம் சொல்ல முடியும்.

இந்தத் தூண்டில் மீன்கள் (முட்டத்தில் இதை 'மரத்து மீன்' என்று அழைப்பார்கள்), வீடு வந்து சட்டியில் கழுவும் போதும் உயிரோடு துடிக்கும். குளம்பு வைத்தால், அன்று மலர்ந்த மலர்களை நுகர்வதுபோல் ஒரு அனுபவம் தோன்றும். முட்டத்தில் மதிய வேளைகளில் இந்த மரத்து மீன்கள் கிடைக்கும்.

"கரை மடி" எனப்படும் கரையிலுருந்தே மீன் பிடிக்கும் முறயும் உண்டு. இதற்கென பிர்த்யோகமான ஒரு வலை.

இருபுறமும் வடங்கள் நடுவில் வலை. ஒரு சிறிய படகில் அல்லது மரத்தில் வலையேற்றப்படும். வடத்தின் ஒருமுனை கரையில் ஒரு குழு வைத்திருக்கும் மறுமுனை படகில். படகு வலையை கடலுக்குள் தளர்த்திக்கொண்டே ஒரு அரை வட்டம் வந்து கரையை சேரும். மறுமுனை இன்னொரு குழு கையில் தரப்படும், இரு குழுவும் தரையில் இருந்தபடியே வலையை கரை நோக்கி இழுக்கும். குளத்திலோ ஆற்றிலோ டவல் வைத்து மீன் பிடிப்பது போலத்தான். இது கொஞ்சம் பெரிய முயற்ச்சி.

இந்தக் கரைமடியில் பொதுவாக சின்ன மீன்களே கிடைக்கும். இவையும் குழம்பிற்க்கினியவை. ஜெல்லி மீன்களும் பேத்தை எனப்படும் உடம்பெல்லாம் முள் கொண்ட ஒரு வகை மீனும் கிடைக்கும். பேத்தைகள் உண்பதற்க்காகாது.

கரைமடி வலைகளை இழுக்கும் போது மட்டுமே 'ஏலேலோ ஐலசா' பாடுவார்கள். நான் கேட்டவரை இது ஒரு இட்டு கட்டி பாடும் பாடலகவே இருந்தது, 'ஏலேலோ ஐலசா' என்ற பதங்களைத் தவிர மற்றவை பாடுபவரின் சொந்த வரிகளாகவே தென்பட்டது. அழகியலைவிட
நகைச் சுவையே மிகுந்திருந்தது அந்த கடலோரக் கானாவில்.

Labels:

2 Comments:

At 1:29 AM, Blogger மஞ்சூர் ராசா said...

அன்பு சிறில், அருமையான ஆரம்பம். கன்யாகுமாரியை இதுவரைப் போகாத என்னைப்போன்றப் பல நண்பர்களுக்கு உங்களின் கட்டுரை உதவியாக இருக்கும்.
புதிதாக வலைப்பதிவைத் தொடங்கியுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.

 
At 8:26 PM, Blogger ஜோ/Joe said...

நம்மூர் வலைகள் பற்றி ,'கணியம்' பற்றி என்னுடைய பழைய பதிவு ஒன்று.
கணியம் -என்ன மக்களே அர்த்தம்?

 

Post a Comment

<< Home