அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

V. ஒளியூட்டு, படம்பிடி, நடி

முட்டத்தை பலருக்கும், ஒருவகையில் எனக்கும், அறிமுகப்படுத்தியது பாரதிராஜாதான். நாம் பிறந்து வளர்ந்த மண்ணானாலும் அதன் அழகு பிறர் கூறத்தான் நமக்குப் புலப்படுகிறது. நான் முட்டத்தில் வழ்ந்த நாட்களைவிட சென்னையிலிருந்து அங்கு சென்று வந்த நாட்களை மிகவும் ரசித்தேன்.

முட்டத்தின் அழகு அதன் பாறைகள். நாய்குட்டிகள் செல்லமாய் கடித்து விளையாடுவதுபோல அலைகள் பாறைகளை அடித்து விளையாடும்.

தவளைபோல் ஒன்று, பூமியில் விழுந்து உறைந்துபோன விண் தட்டு போல ஒன்று, குகை அமைப்பில் இன்னொன்று என்று வகை வகையாய் பாறைகள். இந்த கற்களைச் சுற்றி சொல்லப்பட்ட மென்மையான காதல் திரைக்கதைகளில் முட்டமும் ஒரு பாத்திரம்.

படப்பிடிப்பு, காண்பதற்கு ஒரு சலிப்பான அனுபவம். பலமுறை இதை உணர்ந்திருக்கின்றேன். ஒரு நாள் பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தப்போது கடற்புறத்தில் படம்பிடிக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு சீருடையோடு ஓடினேன்.

பாறைமேல் பாரதிராஜாவின் படக்குழு. மீசையில்லாத இளம் கார்த்திக், பதின்ம வயது ராதா.

கார்த்திக்: "போகலாமா?"

ராதா: "ம்"

கார்த்திக்: "போகலாமா?"

ராதா: "ம்"

"கட். கட்"


அலைகள் ஓய்வதில்லையில் கோர்க்கப்படாத(?) ஒரு காட்சியை இயக்கிக்கொண்டிருந்தார் பாரதிராஜா. நான் பார்த்த முதல் படப்பிடிப்பு இதுதான்.

'அலைகள் ஒய்வதில்லை' முட்டத்தின் முதல் வெற்றிப்படம். அதற்கு முன் 'பூட்டாத பூட்டுகள்' என்ற படம் எடுக்கப்படது. வெளிவந்ததாகத் தெரியவில்லை.

'பகல் நிலவு' படத்தின் ஒரு பாடல் காட்சி, முதன் முதலில் முட்டத்தில் அமைக்கப்பட்ட கனவுப் பாடல். மெழுகுத்திரி போன்ற ஒன்றை எரிய வைத்து பல வணங்களில் புகையெழுப்பினார்கள். அலங்கார ஆடைகளில் நடனப் பெண்கள். ஒவ்வொரு பதிப்பிற்கும் வரிசையாக நின்று இரண்டு மூன்று நளினங்கள் செய்துவிட்டுத்திரும்புவது வேடிக்கையாக இருந்தது.

மணிரத்தினத்தின் 'பகல் நிலவு' படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது பார்த்த ரேவதி இப்போதும் அப்படியே இருக்கிறார். முரளி ட்ராக்டர் மீது அமர்ந்து நண்பர்களோடு பாடும் முதல் பாடல் படப்பிடிப்பு பார்த்திருக்கிறேன், அவரும் இன்னும் அப்படியே. மணிரத்தினம் அப்போது பொதுவாக அறியப்பட்டிருக்கவில்லை. அவரைப் பார்த்த ஞாபகம் இல்லை.

அம்மன் கொவில் கிழக்காலே படத்தில் வரும் ஒரே சண்டைக்காட்சி முட்டத்தின் செம்மண்காட்டில் படமாக்கப்பட்டது. இந்த செம்மண்காடுகள் பற்றி பின்பொரு பதிவு செய்கிறேன். விஜயகாந் கையில் அடிபட்டு கட்டு போட்டிருந்தார், ராதா ரவி மற்றும் படக்குழுவினரோடு சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்.

படப்பிடிபுகளின்போது வரும் குழுவினர் பேசும் சென்னைத் தமிழ் வியப்பூட்டியது. அப்போது வெறும் வானொலி மற்றும் சில பழைய திரைப் படங்கள் மூலம் மட்டுமே வெளியுலகைப் பார்த்திருந்தேன்.

நான்பாடும்பாடலில் சில காட்சிகள், விஜயின் நிலாவே வா, மோகனின் பாடு நிலாவே, உயிரே உனக்காக, ராமராஜனின் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, அர்ஜூனின் தாய்மேல் ஆணை, பிரபு நடித்த சின்னப்பூவே மெல்லப்பேசு, இன்னும் பல வெற்றிப்படங்கள் முட்டத்தைப் பதிவு செய்திருக்கின்றன.

உயிரே உனக்காகவில் வரும் மோகனின் வீட்டை பாதி கட்டிய ஒரு வீட்டின் வெளிப்புறமாக செட் போட்டு செய்திருந்தார்கள். சினிமாவின் மாயத்தனம் அப்போதுதான் முதலில் அறிந்தேன். முட்டத்தில் போடப்பட்ட பெரிய திரைக்கலையமப்பு இதுதான்.


தாய்மேல் ஆணை, அர்ஜூன் ஓய்வெடுக்க அவரின் நகல் நடிகர் உயிரைப் பணயம் வைத்து கர்ணம் போட்டுக்கொண்டிருந்தார்.

எத்தனை படங்களானாலும் முட்டத்து மக்களுக்கு கடலோரக் கவிதைகளே செல்லம். அதுவே ஊரின் அடையாளமக ஆயிற்று. எனக்கு, எந்த ஊர் என கேட்கும் தமிழர்களுக்கும், சில தெலுங்கர்களுக்கும், கடலோரக் கவிதைகள் (கக) முட்டம் என்று கூறியே பழக்கம். கக தெலுங்கிலும் ஆக்கப்படது.

ககவைவிட கடல் பூக்களில் மீனவர் வாழ்க்கை முகங்கள் வெளிப்பட்டிருந்தன. ககவின் காதல் கதைக்கு முட்டம் ஒரு தளம் மட்டுமே ஆயினும் மணி அடித்தால் ஊர் கூடுவது என்ற குமரி மாவட்ட கடலோர வழக்கு இந்தப் படத்தில் கையாளப்பட்டிருந்தது.

கடலோரக்கவிதைகள் முழுவதும் முட்டத்தில் பதிக்கப்படவில்லை. கடலை ஒட்டி மலை இருப்பது போன்ற இடங்கள் விசாகப்பட்டினத்தில் எடுத்தது என கேள்வி பட்டிருக்கிறேன்.
முட்டத்தில் ரயில் நிலையமோ, போக்குவரத்தோ கிடையாது. இதை பலர் என்னிடம் கேட்டுள்ளனர். உண்மையில், தனது வாழ்நாளில் ரயிலையே பார்க்காதவர்கள் முட்டத்தில் பலர் இருந்தார்கள்.

'கோட்டாமடை' எனப்படும், முட்டம் கடல்கரையின் ஒருபகுதி மிக அழகாக இருக்கும். இங்குதான் தற்போது நிழல்கூடை அமைக்கப்பட்டுள்ளது. பல காமெராக்கள் இந்தக் கடற்கரையை பல கோணங்களில் படம் பிடித்துள்ளன.

முன்பெல்லாம் பேருந்து தவிர வேறெந்த வாகனம் வந்தாலும் படப்பிடிப்பு நடக்கிறது என்று தெரியும். யார் வந்து படம் எடுத்தபோதும் முட்டத்தில் படப்பிடிப்பு பார்க்க கூட்டம் அவ்வளவாகக் கூடுதுவதில்லை.

கடலோரக்கவிதையில் ஒரு காட்சி. சத்தியராஜ், ரேகா மற்றும் ராஜாவுக்கு ஊரைச் சுற்றிக் காண்பிக்கின்றார். குகைபோன்ற அமைப்புடைய ஒரு பாறைத்தொகுப்பு. சொல்வதை எதிரொலிக்கிறது அந்தக்குகை.

"உங்களுக்கு புடிச்சவங்களோட பேர சொல்லுங்க", சத்தியராஜ்

"ஜெனிபர்", ராஜா

"ஜெனிபர், ஜெனிபர், ஜெனிபர்", குகை.

முகம் கடுக்கிறார் சத்தியராஜ்.

முட்டத்தில் குகைபோன்ற அமப்புடைய ஒரு பாறைத்தொகுப்பு இருந்தது ஆனால் அங்கு எதிரொலி வருவதில்லை. நான் ரசித்து வியந்த ஒரு காட்சி.

ஒளியூட்டு, படம்பிடி, நடி? Lights, Camera, Action தான் அப்படி மொழிபெயர்த்திருக்கிறேன்.



Labels:

0 Comments:

Post a Comment

<< Home