அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

XVII. சக்கரத்தை கண்டுபிடித்தவன்

உருளும் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது மனித நாகரீகங்களின் அதீத வளர்ச்சிக்கு வித்திட்டது. கால்நடையாக முன்னேறிக்கொண்டிருந்த மனிதர்கள் சக்கரம் மாட்டிக்கொண்டு பறந்தனர். இன்றும் போக்குவரத்து முன்னேற முன்னேற பட்டி தொட்டிகளும் பட்டணங்களாகிவருவதை காணலாம்.

முட்டமும் வெகுவாக மாறியிருக்கிறது. என் பதிவுகளில் வந்த பல பழக்கங்களும் இப்பொது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

திருமணங்கள் அதிகமாக மண்டபங்களிலேயே நடத்தப்படுகின்றன, சைக்கிள்களுக்குப் பதில் பைக்களும், கார்களும். ஒருமணி நேரம் பஸுக்காய் காத்திருந்தவர்கள் ஷேர் ஆட்டோவில் ஏறி பக்கத்து ஊருக்குப்போய் பஸ் பிடித்துக் கொள்கிறார்கள். ஊருக்குள்ளே ரோடுபோட்டு பஸ் ஓட ஆரம்பித்திருக்கிறது.


பொறியியல் முதல் பொருளாதாரம்வரை படித்தவர்கள் ஏராளம். கட்டுமரங்களுக்குப்பதில் விசைப்படகுகள். இன்னும் என்னென்னவோ மாற்றங்கள்.

சுற்றுலா என்ற பெயரில் முட்டம் கடற்கரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன ஓரளவுக்கு கடற்கரையின் அழகு குறைக்கப்பட்டாலும் இவை பயணிகளின் பாதுகாப்பிற்கும் வசதிக்கும் என நினைத்து சாந்தப்படவேண்டியுள்ளது.

ஊரில் சண்டை சச்சரவுகள் குறைந்திருக்கிறது. பொருளாதாரம் விளங்கியிருக்கிறது. குடிசைகள் மாறி ஓட்டுவீடுகளாகி, மாடி வீடுகளாகவும் ஆகிவிட்டிருக்கின்றன.

போக்குவரத்து அதிகமான தெருக்களில் பிள்ளைகளின் விளையாட்டு எப்படி? அவர்களும் கேபிள் டி.வியின் முன்னமர்ந்து நிழல் வாழ்க்கையில் ஐக்கியமாகிறார்கள்.

இன்னும் எத்தனையோ மாற்றங்கள். அலைகள் பாறைகள் மணல்மேடுகளை தொடர்ந்து வாசிப்பவரானால் உங்களுக்குள் ஒரு கற்பனை முட்டம் வரந்து வைத்திருப்பீர்கள். இந்தப்பதிவு அதை கலைத்திருக்கலாம். இதுதான் நிதர்சனம், வாழ்க்கையின் பேருண்மை.

அழிக்கும் கடவுள் சிவன், அவன் பெயரின் அர்த்தம் 'மங்கலம்'. கொல்லும் கடவுளுக்கு 'மங்கலம்' என ஏன் பெயர். அவர் பழையதை அழிப்பதால்தான் புதியன உருவாகின்றன.

தாகூரின் கீதஞ்சலியில் வரும் பாடல் படித்திருப்பீர்கள்,

"எங்கே பகுத்தறிவு எனும் வெள்ளோடை,

செத்த பழக்கங்களெனும் பாலைக்கு வழிதவறவில்லையோ,

எங்கே மனம், உம்மால், என்றும் பரந்துபடும், எண்ணங்களுக்கும் ஆக்கத்திற்கும்

அழைத்துச்செல்லப்படுகிறதோ..

அந்த சொர்க்கத்தில் இறைவா, என் நாட்டை எழச்செய்"

பழையன அழியும்போது சில முனகல்கள் தவிர்க்க இயலாது. நானும் என் பங்கிற்கு முனகியிருக்கிறேன். புது செருப்பு கடிக்கத்தான் செய்யும்.

புதுமை வளரட்டும். பழமை, நம் நினவுகளில், புத்தகத்தில் போட்டுவைத்த ரோஜாப்பூப்போல, வாடினாலும் வாசத்தோடு வாழட்டும்.

அந்த சக்கரத்தை காண்டுபிடித்தவனை மட்டும் அப்புறமா கவனிச்சுக்க வேண்டியதுதான்.

Labels:

4 Comments:

At 11:06 AM, Anonymous Anonymous said...

தாகூரின் பாடல் உண்மையின் உண்மை சிரில்.. கடற்கரை விடயங்கள் அற்புதமாக இருக்கின்றது.

 
At 11:22 AM, Blogger Amar said...

//எங்கே பகுத்தறிவு எனும் வெள்ளோடை,

செத்த பழக்கங்களெனும் பாலைக்கு வழிதவறவில்லையோ,

எங்கே மனம், உம்மால், என்றும் பரந்துபடும், எண்ணங்களுக்கும் ஆக்கத்திற்கும்

அழைத்துச்செல்லப்படுகிறதோ..

அந்த சொர்க்கத்தில் இறைவா, என் நாட்டை எழச்செய்"
//

Amen.

 
At 11:38 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நன்றி இளந்திரையன்

 
At 9:20 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நன்றி சமுத்ரா.

 

Post a Comment

<< Home