அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

XII. வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்

கத்தோலிக்க சர்ச்களை 'மாதாக் கோயில்' என்றும் பிரிவினை (Protestand) சர்ச்களை 'சிலுவைக் கோவில்' என்றும் அடையாளப்படுத்துகின்றனர் பலர். கத்தோலிக்கர்கள், போப்பின் அதிகாரத்தின் கீழ் வருபார்கள், இயேசுவின் தாய் மேரியை (மாதா) மகிமைப்படுத்துகிறார்கள், அவரிடம் மன்றாடுகிறார்கள், அவரைப் புனிதர் என்று கைகொள்கிறார்கள்.

கடவுளிடம் நமக்காக பரிந்துபேசி, நம் மன்றாட்டுகளை பெற்றுத்தருபவர்களை கத்தோலிக்கத் திருச்சபை(சர்ச்), புனிதர்களாக ஏற்றுக்கொள்கிறது(இதைப் பற்றி தேனில் படிக்கலாம்). அன்னை தெரசாவிற்கும் மறைந்துபோன போப் இரண்டாம் சின்னப்பருக்கும் (பவுலுக்கு தமிழில் சின்னப்பர் எனப் பெயர்), இந்தப் புனிதர் பட்டம் வழங்க முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு கத்தோலிக்க கோவிலும் ஒரு புனிதர், அல்லது மாதாவின் ஒரு அடையாளம்(வேளாங்கண்ணி, பாத்திமா, லூர்து என மாதாவிற்கு பல முகங்கள்), அல்லது இயேசுவின் ஒரு அடையாளத்தை மையமாக வைத்து, அதன் நினைவாகக் கட்டப்படுகின்றன. முருகன் கோவில், சிவன் கோவில் போல, லூர்துமாதா கோவில், அந்தோனியார் கோவில் (சென்னை பாரீஸ் கார்னர் புகழ்), திரு இதயக் கோவில் என பல வகைக்கோவில்கள்.

முட்டத்தில் உள்ள கோவில் சகல புனிதர்கள் கோவில். நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி சகல(எல்லா) புனிதர்களையும் கத்தோலிக்க திருச்சபை நினைவு கொள்கிறது. அன்றுதான் முட்டம் கோவில் திருநாள்.

பத்துநாட்கள் திருநாள். முதல் நாள் கொடியேற்றம் துவங்கி கடைசிநாள் கொடியிறக்கம்வரை கொண்டாட்டம். இந்தத் திருநாட்களின் போது ஊர் முழுக்க தோரணம் கட்டி மின்விளக்குகளும், தொடர் மின் விளக்குகளுமாக ஊரே ஜொலிக்கும். கொண்டை வைத்திருக்கும் குழலொலிப்பான்களில் எப்போதும் பாடல்கள்.

புதிதாய் மிட்டய்க்கடைகள் முளைக்கும், ராட்டினங்களும், பலூன் காரர்களுமாக கோலாகலிக்கும் ஊர். பனை ஓலையில் பின்னப்பட்ட பெட்டிகளில் தேன் குழலும் (ஒருவகை இனிப்பு), கார மிக்சரும் கட்டி திருவிழாவுக்கு வந்த உறவினர்களுக்கெல்லாம் வினியேகம் நடக்கும்.

முட்டம் கோவில் மேட்டில் இருக்குமாகையால் அதன் ஒளி அலங்காரம் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல கடற்கரை கிராமங்கள்வரை காணக்கிடைக்கும். ஒன்பதாம் நாள் மாலை ஒரு சிறப்பு வழிபாடும், பத்தாம் நாள் காலை ஒரு சிறப்பு திருவழிபாடும்(பூசை/Mass) நடக்கும். பெரிதாய் நடக்கும் திருநாட்களுக்கு ஆயர் (Bishop) வருவது வழக்கம்.

திருவிழா நாட்களில் சப்பரம்(ஆட்கள் தூக்கிச்செல்லும் தேர்கள்) தூக்குவதும் வழக்கம்.

ஊர்த்திருவிழா போனால் கிறிஸ்துமஸ்தான். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தெருவுக்குத்தெரு சிறப்பக்கப்படும். ஒவ்வொரு தெருவிலும் பாடல்கள் ஒலிக்கப்படும், குடில் அலங்கரிக்கப்படும், கிறிஸ்துமஸ்மரம் நாட்டப்படும். ஊரில் எல்லா வீடுகளிலும் காகித/அட்டை நட்சத்திரம், விளக்கிடப்பட்டு தொங்கவிடப்படும்.

காத்தாடி எனப்படும் சவுக்கு மரங்கள் தான் ஊரில் கிறிஸ்துமஸ் மரம். சிவந்தமண் பகுதியில் கிடைக்கும், சுக்குநாறி(சுக்குபோல மணம் வரும்) செடிகளைப்பறித்து குடில் கட்டுவார்கள். இந்தச்செடியும், சொல்லிவைத்ததுபோல கிறிஸ்துமஸ் நாட்களில்தான் விளையும்.

தெருவுக்குத்தெரு போட்டி போட்டு நடத்தப்படும் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள். லாறிகளில் ஏறி ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட, காரல்ஸ் (Carols) எனப்படும் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடி, ஊராகச்செல்வதும் வழக்கம். கோவிலின் பாடகற்குழு ஊருக்குள் வீடு வீடாகச் சென்று காரல்ஸ் பாடுவது வழக்கம்.

குருசடிகள் என்பது சிறிய ஜெபக்கூடங்கள். பொதுவாக ஒரு புனிதரின் பேரில் அமைக்கப்பட்டிருந்தன, கடற்கரை ஊர்களில் ஊருக்கு இரண்டு மூன்றாவது இருந்தன. இவற்றின் திருவிழா கொண்டாடங்களும் சிறப்பாக்கப்பட்டன.

நான் சிறப்பாக ரசித்த திருநாள் முட்டம் கோவிலின் 75வது வருடக் கொண்டாட்டங்கள். அதிக செலவு செய்து கொண்டாட்டங்கள் சிறப்பிக்கப்பட்டன. கடைசி நாள் இரவு சங்கர் கணேஷின் இன்னிசைக் கச்சேரி. அருமையாகப் போய்க்கொண்டிருந்தது நிகழ்ச்சி. திடீரென கூட்டத்தில் சல சலப்பு. ஒருவர் மேடையை நோக்கி ஓடிப்போய், "ஏல...சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் பாட்டுதவிர வேற பாட்டு இர்ந்தா பாடுங்க... இங்க யார் பாட்டு அதிகம் பாடுதீங்கணி சண்ட வரும்போல" என, சங்கருக்கு நடுக்கம். அதன்பின் 'செந்தமிழ் தேன் மொழியாள்' துவங்கி, சில ஊமைப்படங்களில் வரும் பாடல்கள்வரைப்(?) பாடியிருப்பார்கள், அத்தனையும், அத்தனை பழசு.

ஊர்த்திருவிழா மட்டுமல்லாமல் கன்னியாகுமரிமாவட்டத்திலுள்ள சில கோவில்களின் திருவிழாக்களை எல்லோரும் கொண்டாடுவது வழக்கம். கொளச்சல்/குளச்சலில் (துறைமுக கிராமம்) திருவிழாக்கள் பிரபலம், கோட்டாறு கோவில், பெரிய காடு அந்தோனியார் கோவில், கண்டன்விளை கோவில் என சில கோவில்கள் இதில் அடக்கம்.

பெரியகாடு அந்தோனியார் கோவில் திருவிழாவின் போது வானவேடிக்கைகள் நிகழும். இந்தக்கோவிலில் நேர்த்திக்கடனுக்காக (கிறித்தவர்கள் நேர்ச்சை என்கிறார்கள்), 'அந்தோனியார் மொட்டை' போடப்பட்டது. அந்தோனியாருக்கு இருப்பது போலவே வழுக்கையடிக்கப்படு, தலையின் கீழ் ஓரத்தில் மட்டும், தலையைச் சுற்றி வட்டமாக முடி விடப்படும். முன்பெல்லம் கத்தோலிக்க பாதிரியயர்களுக்கு டான்ஷர்(Tonsure) செய்வது வழக்கம். டான்ஷர் என்பது தலையின் உச்சியிலிருந்த்து கீழாக இவர்களது தலைமுடி மழிக்கப்பட்டிருந்த்து. அதன் எதொரொலிதான் 'அந்தோனியார் மொட்டை' .

பெரிய காட்டிலும் மற்றசில கோவில்களிலும் கல் உப்பும், முழு நல்லமிளகும், கையில் கட்டிக்கொள்ள அர்சிக்கப்பட்ட நூலும் வழங்கப்படும்.

சகல புனிதர்கள் திருநாளுக்கு அடுத்த நாள் (நவம்பர் 2) சகல ஆத்துமாக்கள் திருநாள். இறந்து போனவர்களை நினவுகூறும் திருநாள். எல்லா கத்தோலிக்க கோவில்களிலும் சிறப்பாக்கப் படுகிறது இந்த நினைவுநாள். இதை ஒட்டி எங்கள் வீட்டில் இறந்தவர்கள் நினைவாக சில ஏழைகளுக்கு உணவு வழங்குவது வழக்கம்.

கடற்கரை ஊர்களில் ஈரமான கடல் மண்ணெடுத்து கல்லறைகளை புதுப்பித்து அலங்கரிப்பார்கள். முட்டதில் கடல் மணல் பல வண்ணங்களில் கிடைக்கும். கறுப்பு, இளஞ்சிவப்பு, பழுப்பென பல நிறங்களில் மண்ணெடுத்து அலங்கரிக்கப்பட்ட கல்லறைகள் பார்பதற்கு அழகு.

கல்லறைகள் மந்திரிக்கப்பட்டு சிறப்பு ஜெபங்கள் செய்யப்பட்டன. தெளிக்கப்பட்ட புனித நீரோடு கண்ணீர்த்துளிகளும் அந்தக் கல்லறைக்காட்டை ஈரம் செய்தன.

அலங்கரிக்கப்பட்ட கல்லறைகளை பார்க்கும்போது 'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்' நாமும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே எனத்தோன்றியது.

Labels:

6 Comments:

At 7:29 PM, Blogger kirukan said...

Nice writeup.

 
At 9:46 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நன்றி, கிறுக்கன்... இப்போ மனசுக்கு பரவாயில்லை போலிருக்கிறது? ;)

 
At 8:47 AM, Anonymous Anonymous said...

are these for real?

 
At 9:13 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

anonymous..

தலைப்புக்கு கீழே குறிப்பிட்டதுபோல...இதெல்லாம் ஞாபகங்களின் தொகுதி.

உங்கள் ஓட்டுக்கு நன்றி.

ஒரு புனை பேராவது போடலாமே

 
At 12:43 AM, Anonymous Anonymous said...

So nice to read it, know it. It's great thing to shower these in the site. heartly congrates.

By Bromod

 
At 7:04 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

Thanks for the comments Bromod.

 

Post a Comment

<< Home