அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

I. பின்புலம் - எனக்கும், ஊருக்கும்.

முட்டம், கிட்டத்தட ஒரு குன்றுதான். கடலை இருபக்கங்களிலும் உள்விட்டு நிலம் முட்டிக்கொண்டிருக்கும். பாறைகள் நிலமெங்கும், கரையெங்கும். அலைகள் கரைகளை தினம் தினம் மாற்றியமைத்துக்கொண்டிருந்தன.

கடல் மட்டதில் கீழமுட்டம், குன்றாக மேலமுட்டம், செம்மண் நிலப்பரப்பாக மேலமுட்டத்துக்கும் மேலே, சிவந்தமண் எனப்பட்ட ஜேம்ஸ் நகர்.

முட்டம் உங்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம். கன்ன்னியாகுமரியை தவிர்த்தால் குமரி மாவட்டத்தில் பெயர்போன ஒரு கடற்கரை கிராமம். உபயம்- பாரதிராஜா.

முட்டத்தின் அழகே அதன் பாறை நிறைந்த சமச்சீரற்ற நிலப்பரப்புதான். அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்தும் இருக்கும்.

குமரி மாவட்டத்தில் பரவலாக 'சேரியா முட்டம்' என்றும் 'லைட்ஹவுஸ் முட்டம்' என்றும் அறியப்படுகிறது. தமிழகத்தில் எங்கும் 'கடலோரக்கவிதைகள் முட்டம்'.

நான் உங்களுக்கு அறிமுகமாயிருக்க வாய்ப்பில்லை. பிறந்து 15 வருடங்கள் முட்டத்தில், அதன்பின் சென்னையில். இடையிடையே தமிழகத்தில் சில பகுதிகளில் வாழ்ந்தவன். சில வருடங்களை அமெரிக்கவிலும் கழித்துள்ளேன். கல்லூரி, சென்னை இலயோலா.

அப்பா அம்மா ஆசிறியர்கள். கன்னியாகுமரியின் மிகப் பெருமைக்குரிய தொழில். குடும்பதிற்கு ஒருவர் வாதியாராகவேண்டுமென எழுதாத சட்டம்.

இது போதும் இப்போது.

இந்தத் தொடர் எந்தவித ஆராய்ச்சியும் இன்றி, என் சொந்த அனுபவங்களின் தொகுப்பாகவும், அவற்றைப் பற்றிய என் கருத்துக்களின் வெளிப்பாடாகவும் அமையும். வாழ்க்கை பற்றிய என் என்ணங்களை பதிக்கவும் முனைகிறேன்.

Labels: