அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

அலைகள் ஓய்கின்றன

மிகுந்த சந்தேகங்களுடன் இந்த வலைப்பதிவு தொடரை ஆரம்பித்தேன். என் மனைவியின் ஊக்கமே என்னைத் தொடர வைத்தது. கூடவே ஜோ, மஞ்சூர் ராசா, ரெஜினி ராம்கி போன்றோரின் வாழ்த்துக்கள், மற்றும் செயமோகன் அவர்களின் மின்னஞ்சல், தினமலர்வரை கொண்டுசென்றது. சில நேரங்களில் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்தபோதெல்லாம் யாராவது ஒருவர் ஒரு டானிக் பின்னூட்டம் போட்டுவிடுவார்.

மதி கந்தசாமியின் திறனாய்வு மறக்கமுடியாதது. அப்படிப்போடுவின் 'இவரை நட்சத்திரமாக்குங்கள்' எனும் கோஷம், வசந்தன், தாணு, ராகவன், கைப்புள்ள, பி.கே.எஸ், டி.பி.ஆர். ஜோசஃப், மாயவரத்தான், ஜான், கிறுக்கன், மணியன், சந்தோஷ், ராமச்சந்திரன் உஷா, காவியன், மகெஸ், தங்கமணீ, குமரன் ஆகியோரின் பின்னூட்டங்கள்... அல்ல சத்தூட்டங்கள், என்னை மேலும் எழுதத் தூண்டின. சீமாச்சு மீனே சாப்பிடாதவரானாலும் மீன் பற்றிய பதிவுக்கு பாராட்டளித்திருந்தார். எல்லோருக்கும் நன்றி.

வலைப்பதிவு எழுதுவது கடல் நடுவே தீவில் சிக்கித் தவிப்பது போன்றதொரு அனுபவம். யாராவது வந்து அங்கீகரிக்கும்வரை தனிமையும் வெறுமையும்தான். பின்னூட்டங்களின் மகிமை அதைப் பெறும்வரை புரிவதில்லை.

தமிழிலில் என் முதல் முயற்சி இது. ஆங்கிலத்தில் எழுதி பழக்கப்பட்டிருந்தேன். ஆங்கிலத்தில் எப்படி எழுதுவேனோ ஓரளவு அப்படியே தமிழிலும் எழுதினேன், இதுவே என் நடை நன்றாயிருக்கிரது என்கிற பாராட்டுக்களுக்கு காரணமாகலாம் என நினைக்கிறேன். திமிழிலக்கணம் படித்து வருடங்களாயிற்று, என் பதிவில் காணக்கிடைக்கும் இலக்கண, எழுத்துப்பிழைகளுக்காய் தமிழ்த்தாயிடமும், வாசகர்களிடமும், என் தமிழாசிரியர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

அலைகள் பாறைகள் மணல்மேடுகளை ஒரு நாவலாக எழுத ஆரம்பித்தேன். ஒரு அத்தியாத்திற்குப்பிறகு நாவல் எழுதுவது ஒரு மிகப்பெரும் முயற்சியாகப் பட்டது. மனதிலுள்ளது அந்த எழுதப்படாத நாவலின் கதை. இன்னும் சில தகவல்கள் சேகரித்து இந்தப்பதிவை ஒரு புத்தகமாகத் தொகுக்கலாம்... விரைவில் இதற்கான முயற்சி துவங்கும்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா பொகிறவர்கள் முட்டத்திற்கும் போகலாம். நாகர் கோவில் பேருந்து நிலையத்திலிருந்து (வடசேரி அல்ல), முட்டம் மற்றும் கடியபட்டினத்திற்கு பஸ்கள் உள்ளன. கடிய பட்டினம் செல்லும் எல்ல பஸ்களும் முட்டம் செல்வதில்லை. லைட் ஹவுஸ் வந்ததும் இறங்கினால் மேற்கில் அழகிய கடற்கரை காணலாம். கோவில் லைட் ஹவுசிலிருந்து கிழக்கில் தெரியும்.

முட்டம் மேடானதால் கடலை கிழ்நோக்கிப் பார்க்கும் அபூர்வக் காட்சி கிடைக்கிறது. லைட் ஹவுஸ் மேலே ஏற அனுமதி கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள். அடுத்தமுறை இந்தியா வரும்போது ஒரு வலைப்பதிவர் கோட்டமொன்று முட்டத்தில் ஏற்பாடு செய்யலாம்.

என் நினைவுப் பயணங்களில் என்னோடு பயணித்தமைக்கு நன்றி.

தொடர்ந்து தேனில் பதிக்கிறேன். பைபிள் கதைகள் தொடர் விரைவில் ஆரம்பம்.

Labels: