அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

II. ஊர் குறிப்பு

கடற்கரை கிராமங்களைப்பற்றி பலருக்குத் தெரிவதில்லை. நகரங்களில் வாழ்பவர்கள் தங்களை அடுத்துள்ள கிராமங்களையே புரிந்துகொள்ள முனைவதில்லை, அவர்களிடம் கடல் சார்ந்த ஊர்களைப்பற்றிய அறிதலை எதிர்பார்க்க முடியாது.

விவசாய கிராமத்து மக்களிடமும் மீனவக் கிராமங்களைப் பற்றி மேலோட்டமான மதிப்பீடுகளே இருந்துவருகின்றன.

மீனவர்கள் தங்களை பெரிதாக வெளிப்படுத்திக் கொள்ளாததே இதற்கு முதற் காரணம். கரையிலிருந்து கடல் நோக்கியே பழக்கப்பட்டிருந்தன அவர்கள் பார்வைகள்.

கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடங்களிலும் கடற்கரை கிரமங்களுக்கும் மற்ற கிராமங்களுக்கும் புவியியல் இடைவெளி இருந்தது. இன்றும் இருக்கின்றது. இதுவும் ஒரு காரணம்.

நெய்தல் நிலத்தின் இன்றையப் பெருமைகளை தமிழில் எழுதிவைத்தவர்களும் குறைவே. சில ஆரய்ச்சிகள் இருந்தாலும், வெகுஜன பதிவுகள் மிகக்குறைவு. படித்து மீனவர் கிராமங்களிலிருந்து வெளியேறுபவர்களும் தங்களின் மூலத்தை(Origin என்று வாசிக்கவும்) மறைத்தே வாழ்கின்றனர். எது ஈனம்? சொந்த அடையாளங்களைத் தொலைத்து நிற்பதா இல்லை அணிந்து அலங்கரிப்பதா?

முட்டம் கடற்கரை கிராமங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. மீனவர்கள், மீன் வியாபாரிகள், ஆசிறியர்கள், கடைகள் வைத்திருப்பவர்கள் என்று இங்குவாழும் மக்களை எளிதாய் வகைப்படுத்திவிடலாம்.

பரவர் முக்குவர் என்ற குமரி மாவட்டத்தின் இருபெரும் மீனவ ஜாதி மக்கள் ஒன்றாய் (ஒற்றுமையாய் என்றும் வாசிக்கலாமோ?) வாழும் ஊர். இரண்டு பள்ளிக்கூடங்கள், உயர்நிலை வரை(இப்போது மேல்நிலை).

கடலைமறைத்து நிற்கும் தேவாலயம், பல ஊர் தாண்டிக் கேட்கும் கோவில் மணிகள், மணிகள் உறங்கக் கூண்டு.உரோமாபுரியிலிரிந்து கப்பலில் வந்தவை இந்த மணிகள். (கடலோரக் கவிதைகள் படத்தில் ஆர்ட் டைரக்டர் செய்த அட்டை மணிதான் உபயோகப்படுத்தப்பட்டது).
ஊரின் முகப்பில், கலங்கரை விளக்கம்(light house), அஞ்சல் நிலையம், பேருந்து நிலையம். ஊரைவிட்டு சற்றுத் தள்ளி அரசு மருதுவமனை.

இந்தியாவின் சில கிராமங்களோடு ஒப்பிட்டால் முட்டம் ஒரு நகரமாகத் தோன்றும்.

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களின் மையப் புள்ளியாக முட்டத்தை கருதலாம்.

புவியியலில் முட்டம் கிழக்கையும் மேற்கையும் பிரித்து, கடலுக்குள் முட்டி நிற்கும். கன்னியாகுமரியிலிருந்து பார்த்தால் முட்டம் அதன் மெற்கே உள்ள ஊர்களை மறைத்து நிற்கும். மேற்கிலிருந்து பார்த்தால் கிழக்கை மறைக்கும். கன்னியாகுமரியைப்போல் இங்கிருந்தும் சூரிய உதையத்தையும் மறைவையும் ஒரே இடத்திலிருந்து பார்க்கமுடியும்.
வாழ்வியலிலும் முட்டம், பரவர் சமுதயத்தின் மேற்கு எல்லையாகக் கருதப்படுகிறது. முட்டதிற்கு மேற்கே பெர்னாண்டோஸ் என அழைக்கப்படும் பரவர் சமுதயத்தினர் பரவலாக இல்லை. அதேபோல் முட்டத்திற்கு கிழக்கே முக்குவர் கிராமங்கள் சிலவே உள்ளன. (ஜாதி பற்றிய பதிவுகளை எந்தவித விறுப்பு வெறுப்புகளுமின்றி, சமூக வாழ்வியல் தகவலாகவே வைக்கிறேன்.)

முற்றிலும் கத்தோலிக்க கிறித்துவர்கள்.

குமரியின் மீனவக்கிராமங்களில் கத்தோலிக்க கிறித்துவர்கள் மட்டுமே உள்ளனர். புனித சவேரியாரால்(St. Francis Xavier) மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். இவர் உடல்தான் இன்றும் கோவாவில் வைக்கப்பட்டுள்ளது.

16ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தென்கோடிகளில், குறிப்பாக மீனவ கிராமங்களில் கிறித்துவம் தழைக்க புனித சவெரியாரே காரணம்.

கடற்புறங்களில் காவல் நிலையங்கள் இருந்ததில்லை. ஒரு கோணத்தில் பார்த்தால் மீனவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களோ எனத்தோன்றும். ஊரின் பிரச்சனைகளை ஊர் பங்குக் குழு நிவாரணம் செய்தது. பங்கு என்பது கத்தொலிக்க கிறித்துவ அமைப்பின் கடைசிக் கிளை. ஒரு பெரிய ஊரின் கோவிலை(சர்ச் என்று வாசிக்கவும்) நிர்வகிக்கும் குழு. ஊர் பிரதிநிதிகளின் கூட்டமைப்பு. அந்த்தந்தக் கோவிலின் முதன்மை பாதிரியார் இதற்கு தலைமை தாங்குவார்.இந்த பங்குக்குழுவே ஊரின் பல சமூக, பொருளாதர முகங்களை நிர்வகித்தது. இவர்கள் அவ்வப்போது சட்டங்கள் இயற்றுவதும் உண்டு.

தனிமனிதர் மற்றும் குடும்பத் தகறாருகளுக்கும் இவர்களே சிலவேளை பஞ்சாயத்து செய்துவைத்தனர். போலீஸ் கேஸ் எல்லாம் மிகக் குறைவே. ஊர்க்கலவரங்களின்போது மட்டும் போலிஸ் தலையீடு இருந்தது.

ஊரின் முக்கியத் தொழில், மீன் பிடித்தல். மற்ற சில மீனவ கிராமங்களைப்போல் அல்லாமல் முட்டத்தில் அதிகம்பேர் வளைகுடா நாடுகளுக்குச் செல்லவில்லை.
இதற்கு தனிப்பட்ட காரணஙகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

கிழக்கேயுள்ள ஊர் பிள்ளைதோப்பு, மேற்கே கடியப்பட்டணம். வடக்கே அம்மாண்டி விளை தெற்கே நீலக்கடல்.

முட்டத்தின் மேடுபள்ளமான நிலப்பரப்பு அதன் வாழ்வியலை பிரதிபலித்தது.

Labels: